அதிக சத்த இசை நிகழ்ச்சிகளால் மாரடைப்பு ஆபத்து

புதுடெல்லி, மார்ச் 7-பீகார் மாநிலத்தில் உள்ள சீதாமர்கி மாவட்டத்தில் கடந்த 4-ந்தேதி நடந்த ஒரு திருமணத்தின் போது அதிக சத்தத்துடன் கூடிய இசை காரணமாக மணமேடையில் மணமகன் சுரேந்திர குமார் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே போல தெலுங்கானாவில் உறவினர் ஒருவரின் திருமணத்தில் நடனமாடி கொண்டிருந்த 19 வயது இளைஞர் ஒருவரும் நடனமாடி கொண்டிருந்த போதே சுருண்டு விழுந்து இறந்தார். கடந்த ஆண்டு நவம்பர் 25-ந்தேதி வாரணாசியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் நடனமாடி கொண்டிருந்த ஒருவர் சுருண்டு விழுந்து இறந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின. இது போன்ற சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் திருமண விழாக்களில் அதிக சத்தத்துடன் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகள் இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு காரணமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் திருமண விழாக்களில் அதிக சத்தத்துடன் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளால் மாரடைப்பு ஏற்படலாம் என சில ஆய்வு தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பாக, ஐரோப்பிய மருத்துவ இதழ்
ஆய்வு ஒன்றை கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கியது. 500 ஆரோக்கியமான பெரியவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அதிக சத்தத்துடன் கூடிய இசை ஒரு நபரை பலவீனமாக மாற்றும் என கண்டறியப்பட்டுள்ளது. சராசரியாக 24 மணி நேர இரைச்சல் அளவில் ஒவ்வொரு 5 டெசிபல் அதிகரிப்பது இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.இதனால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான பாதிப்புகள் 34 சதவீதம் அதிகரிப்பதை கண்டறிந்துள்ளனர். இதுபோன்ற ஆய்வு ஜெர்மனியில் உள்ள மைன்ஸ் பல்கலைக்கழக மருத்துவ மையத்திலும் நடத்தப்பட்டது.
மேலும் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு காரணமாக மாரடைப்பு, மூளை பக்கவாதம் மற்றும் ரத்த உறைவு போன்றவை அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.