அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா

தர்மபுரி மார்ச் 16
தருமபுரி மாவட்டம்
நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் உள்ளது பிரசித்தி பெற்ற தட்சிணகாசி காலபைரவர் திருக்கோவில். இக்கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமி விழாவை முன்னிட்டு, அதிகாலை முதல் சாமிக்கு 108 வகை நறுமணப்பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான பழங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சாமிக்கு 1008 ஆகம பூஜைகளும், வேத பாராயணம் மற்றும் சிறப்பு அர்ச்சனையும் நடந்தது.
பின்னர் சாமிக்கு உபகார பூஜைகளுடன் ராஜ அலங்கார சேவையும், மகா தீபாரதனையும் நடந்தது. இந்த சிறப்பு வழிப்பாட்டில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், கர்நாடக மாநில பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


பின்னர் சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக சாம்பல் பூசணியில் விளக்கேற்றி பக்தர்கள் வழிப்பட்டனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்றிரவு இரவு கோவில் வளாகத்தில்
108 கிலோ மிளகு, 1008 கிலோ மிளகாய் கொண்டு
சத்ரு சம்ஹார யாகம் நடைபெறும். தொடர்ந்து கோவில் வளாகத்திலேயே சாமி வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார், கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம், கோவில் அர்ச்சகர் கிருபாகரன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.