
குமரி, மார்ச் 4-சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர். சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக ஐயா வைகுண்டரை அவர் வழியை பின்பற்றும் மக்கள் பார்க்கின்றனர். அவரது 191-வது அவதார தினமான இன்று அவரை வழிபடும் மக்கள், அந்தந்த பகுதிகளில் ஊர்வலம் செல்வது வழக்கம். அவரின் அவதார தினத்தைக் கொண்டாடும் வகையிலும், பக்தர்களின் வசதியையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டும் 4 தென் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறையை அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகளில் பொதுத் தேர்வு நடைபெற்றால் விடுமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.