
சிம்லா,செப்.13: கனமழைக்கு இதுவரை மாநிலத்தில் 260 பேர் பலியாகி உள்ளனர். மழைக்காலத்தில் 165 நிலச்சரிவுகள் மற்றும் 72 திடீர் வெள்ளப்பெருக்குகள் பதிவாகியுள்ளன. ஜூலை 14 மற்றும் 15-ந்தேதிகளில் குலு மற்றும் மண்டி மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பேரழிவை ஏற்படுத்தியது.
இமாசலபிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு கனமழை காரணமாக ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இமாசல பிரதேசத்தில் ஏற்பட்ட பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 2 நாள் பயணமாக நேற்று இமாசலபிரதேசம் வந்தார்.பிரியங்கா காந்தி, “மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி உள்ளதா அல்லது பா.ஜனதா ஆட்சி உள்ளதா என்பதை கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசு கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு உதவ வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். பிரியங்கா காந்தியுடன் முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு இருந்தார்.