
சென்னை: அக்.9- எமிஸ் பதிவேற்ற பணிகளை மேற்கொள்ள மாட்டோம் என தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
எண்ணும் எழுத்தும் திட்டம், ஆசிரியர்களுக்கு தேவையற்ற பணிச்சுமைகளை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் கல்வித் தரத்தை பாதிக்கிறது. எனவே அதை முழுமையாக கைவிட வேண்டும். எண்ணும் எழுத்தும் திட்டத்தில் செல்போன் செயலி மூலம் தேர்வு நடத்துவதையும், அதன்மூலம் மாணவர்களின் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய சொல்வதையும் கைவிட வேண்டும்.
பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ளும் பெரும்பாலான பணிகளை கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு என்று கூறப்படும் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இந்த பணிகளை ஆசிரியர்கள் நாள்தோறும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.