Home Front Page News ஆசிரியை படுகொலை – நடந்தது என்ன?

ஆசிரியை படுகொலை – நடந்தது என்ன?

தஞ்சாவூர், நவ. 21-திருமணம் செய்த மறுத்ததால் ஆத்திரமடைந்து, அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியயை குத்திக் கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகேயுள்ள சின்னமனை கிராமத்தைச் சேர்ந்த முத்து மகள் ரமணி(25). மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளயில், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக அடிப்படையில் கடந்த ஜூன் 10-ம் தேதி தமிழ் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
அதே கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் மதன்குமார் (28). சிங்கப்பூரில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உள்ளூரிலேயே மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ரமணியும், மதன்குமாரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதன்குமாரின் பெற்றோர், ரமணியின் பெற்றோரைச் சந்தித்து பெண் கேட்டுள்ளனர். ஆனால், மதன்குமாரின் நடவடிக்கை சரியில்லை என்று கூறி, ரமணியின் பெற்றோர் பெண் தர மறுத்துள்ளனர். இதையடுத்து, மதன்குமாரிடம் பேசுவதை ரமணி தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ரமணியை மீண்டும் சந்தித்து, திருமணம் செய்து கொள்ளுமாறு மதன்குமார் கேட்டுள்ளார். ஆனால், ரமணி மறுத்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு சென்ற மதன்குமார், வராண்டாவில் நின்று கொண்டிருந்த ரமணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியால், ரமணியின் கழுத்து உட்பட பல்வேறு இடங்களில் குத்திவிட்டு தப்பியோட முயன்றார்.
ஆசிரியர்கள், மாணவர்களின் கூச்சலிட்டதைக் கேட்டு, பள்ளிக்கு வெளியே ஆட்சியர் வருகையையொட்டி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சேதுபாவாசத்திரம் போலீஸார், மதன்குமாரை மடக்கிப் பிடித்தனர்.
இதனிடையே, பலத்த காயமடைந்த ரமணியை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ரமணியைக் குத்திய மதன்குமாரை போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version