
லண்டன், மார்ச் 6-காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஒரு வார பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக கூறினார். அதற்கு மத்திய மந்திரி அனுராக் தாக்குர், வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை ராகுல்காந்தி இழிவுபடுத்துவதாக குற்றம் சாட்டினார். இந்தநிலையில், லண்டனில் இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்று ராகுல்காந்தி பேட்டி அளித்தார். அனுராக் தாக்குர் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு அவர் கூறியதாவது:- என் நாட்டை நான் இழிவுபடுத்தவில்லை. அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. அப்படி செய்யவும் மாட்டேன். பா.ஜனதா எனது பேச்சை திரித்து வெளியிடுகிறது. வெளிநாடு செல்லும்போது இந்தியாவை இழிவுபடுத்தும் மனிதர் யார் என்றால் பிரதமர் மோடிதான். முந்தைய 10 ஆண்டுகள் வீணாகி விட்டதாக அவர் பேசினார். ஒன்றுமே நடக்கவில்லை என்று கூறினார்.
அந்த 10 ஆண்டுகள், நாட்டுக்காக பணியாற்றியவர்கள், நாட்டை கட்டமைத்தவர்களை பற்றி அவர் அப்படி சொல்கிறார். அவர்களை அவர் இழிவுபடுத்தவில்லையா? வெளிநாட்டு மண்ணில் இருந்தபடி அப்படி பேசினார். கொடூர தாக்குதல் இந்தியாவில் ஜனநாயக கட்டமைப்புகள் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. அதனால்தான் நான் இந்தியா முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டேன். நாடாளுமன்றம், நீதித்துறை, நிறுவனங்கள், ஊடகம் என அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. மக்களின் குரலை எடுத்துச் சொல்வதே கடினமாக இருக்கிறது. பி.பி.சி. நிறுவனம் இப்போதுதான் அதை உணர்ந்துள்ளது. ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக, இடைவெளியின்றி அதுதான் இந்தியாவில் நடந்து வருகிறது. பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். தாக்கப்படுகிறார்கள். அரசாங்கத்தை ஆதரித்து எழுதும் பத்திரிகையாளர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. நாளைக்கே அரசுக்கு எதிராக எழுதுவதை பி.பி.சி. நிறுத்திக்கொண்டால்,எல்லாம் இயல்புநிலைக்கு வந்து விடும். வழக்குகள் எல்லாம் மறைந்துவிடும்.
ஓரணியில் எதிர்க்கட்சிகள் நாட்டில் வேலையின்மை, விலைவாசி உயர்வு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பிரச்சினைகளால் மக்களிடையே கோப உணவு நிலவுகிறது. பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்ட ஆலோசனை நடந்து வருகிறது. சில வியூக பிரச்சினைகள் குறித்து இன்னும் ஆலோசனை நடத்த வேண்டும். நாம் போட்டியிடுவது ஒரு அரசியல் கட்சிக்கு எதிராக மட்டும் அல்ல. ஒரு நிறுவனத்துக்கு எதிராக போட்டியிடுகிறோம். ஏனென்றால், அனைத்து நிறுவனங்களையும் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றி விட்டன. எனவே, சமமான போட்டிக்கு வாய்ப்பில்லை. பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம், எதிர்க்கட்சிகள் மனதில் ஆழமாக வேரூன்றி உள்ளது. அதில் சந்தேகம் இல்லை. அதானி நாட்டின் குரல்வளையை நெரிக்க பா.ஜனதா முயற்சிக்கிறது. நாட்டின் வளங்களை மூன்று, நான்கு பணக்கார நண்பர்களிடம் ஒப்படைக்க பார்க்கிறது. கவுதம் அதானி, தான் போட்டியிடும் எல்லா ஏலங்களிலும் வெற்றி பெறுகிறார். எல்லையில், சீனா விரோதமாகவும், அத்துமீறியும் நடந்து வருகிறது. அதனிடம் இந்தியா கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.