
புதுடெல்லி: நவ.2-
என் மண் என் தேசம் நிகழ்ச்சிக்காக 45 சிறப்பு ரயில்கள் டெல்லிக்கு இயக்கப்பட்டன. தேசத்துக்காக போர் செய்து உயிர் நீத்த வீரர்களின் நினைவாக நாட்டு மக்கள் அவரவர் பகுதிகளில் இருக்கின்ற மண்ணை சேகரித்து சுமார் 7,500 கலசங்களில் அவற்றை பராமரித்து அதனுடன் மரச் செடிகள் வைத்து டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மோடி வைத்தார்.அதன் அடிப்படையில் நாட்டு மக்கள் அவரவர் பகுதிகளில் சுமார் 7,500 கலசங்களில் மண்களை சேகரித்து மரச்செடிகள் உடன் அவற்றை டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். அவற்றை ஒருங்கிணைத்து தேசிய போர் நினைவு சின்னம் அருகே அமுத பூங்கா அமைக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.
இதையடுத்து ஏராளமானோர் டெல்லிக்கு மரச்செடிகளுடன் வந்தனர். அவ்வாறு டெல்லிக்கு மரச்செடிகள் கொண்டு வருபவர்களின் வசதிக்காக நாடு முழுவதிலும் இருந்து டெல்லிக்கு 45 சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்கியது.என் மண் என் தேசம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமுத பூங்கா கடமைப் பாதையில் அமையும் என்றும் அறிவித்தார்.இந்த நிகழ்ச்சிக்காக டெல்லிக்கு இயக்கப்பட்ட ரயில்களுக்கு சிறப்பு கலச யாத்திரை ரயில்கள் என்று பெயர் வைக்கப்பட்டன . இந்த ரயிலில் வந்த தன்னார்வலர்களை வரவேற்கவும், தங்குவதற்கும், பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.