ஒரே நேரத்தில் 2 பெண்களுக்கு தாலி

திருப்பதி: மார்ச். 10 – ஆந்திர மாநிலம், வைணம், எர்ர போடு மலைவாழ் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் மதிவி சத்தி பாபு (வயது 24). சோழ பள்ளியை சேர்ந்தவர் ஸ்வப்ன குமாரி (19). இருவரும் கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். அப்போது இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டதால் ஸ்வப்னகுமாரி கர்ப்பமாகி பெண் குழந்தை பெற்றெடுத்தார். இதேபோல் சத்தி பாபு அவரது உறவுக்கார பெண்ணான குர்ன பள்ளி சுனிதா (19)என்பவரையும் காதலித்து வந்தார். இருவரும் தனிமையில் சந்தித்து கொண்டதால் அவரும் கர்ப்பமாகி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.சுனிதா திருமணமாகாமல் குழந்தை பெற்றெடுத்ததால் அவரது பெற்றோர் சத்யநாராயணா, ருக்மணி ஆகியோர் தங்களது மகளுக்கு நேர்ந்த அநீதி குறித்து பழங்குடியின பெரியவர்களிடம் முறையிட்டனர். பஞ்சாயத்தை கூட்டி பேசிய போது சத்தி பாபு, சுனிதாவை திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து திருமண பத்திரிகை அச்சடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சத்தி பாபு கொடுத்து வந்தார். திருமண ஏற்பாடுகள் குறித்து மற்றொரு காதலியான ஸ்ப்னகுமாரிக்கும் பெற்றோர் வெங்கடேஸ்வரலு, சம்மக்கா ஆகியோருக்கு தெரிய வந்தது. சத்திபாபு வீட்டிற்கு வந்த அவர்கள் தங்களது மகளையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். இதற்கும் சம்மதம் தெரிவித்த சத்தி பாபுவின் பெற்றோர் இரண்டு பெண்களுக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். 2 பெண்களை வாலிபர் ஒருவர் ஒரே மேடையில் திருமணம் செய்து கொள்வது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அரசு அதிகாரிகள் திருமணம் நடைபெற இருந்த மணமகன் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் திருமணத்தை நடத்தக்கூடாது என மணமகனின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் 10 மணி வரை அதிகாரிகள் திருமணத்தை நிறுத்தி விடுவார்களோ என்ற அச்சம் நிலவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பழங்குடியின பெரியோர்கள் அரசு அதிகாரிகளை சமாதானம் செய்து 2 பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என தெரிவித்தனர்.