கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

நாகப்பட்டினம்: அக். 19: கடலில் 2 பைபர் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்கொள்ளையர்கள் கடுமையாகத் தாக்கி, ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வானவன் மகாதேவி மீனவர் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் (50) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் சுப்பிரமணியன், முருகேசன் (41), சுந்தர மூர்த்தி (55), ராஜ கோபால் (62), மகாலிங்கம் (60) ஆகிய 5 பேர் வானவன் மகாதேவி கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் மதியம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அன்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே 11 நாட்டிக்கல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு அதிவேக படகில் இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 பேர் வந்தனர். அவர்களில் இருவர் சுப்பிரமணியனின் பைபர் படகில் ஏறி 5 மீனவர்களையும் கட்டை, இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கிவிட்டு, படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, 4 டார்ச் லைட்கள், 2 சிக்னல் கருவிகள், 600 கிலோ வலை மற்றும் பிடித்து வைத்திருந்த மீன் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.அதேபோல, கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று முன்தினம் இரவு வானவன்மகாதேவி மீனவர் தெருவைச் சேர்ந்த முருகாஎன்பவருக்கு சொந்தமான பைபர் படகில்செல்வம் (35), முருகானந்தம் (36), சுப்பிரமணியன் (37), சண்முகவேல் (35) ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.2 படகுகளிலும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.இதையடுத்து, காயமடைந்த 4 மீனவர்களும் படகில் கரைக்கு திரும்பியபோது, வழியில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சுப்பிரமணியன் உள்ளிட்ட மற்ற 5 மீனவர்களையும் பார்த்து, மீட்டனர். பின்னர், காணாமல் போன சுப்பிரமணியனின் படகையும் தேடிக் கண்டுபிடித்து, 2 படகுகளில் 9 மீனவர்களும் நேற்று காலை வானவன் மகாதேவி கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.