மதுரை: ஆக 14-
பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதால், தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனுக்களை உயர் நீதிமன்றம் உத்தரவு எதுவும் பிறப்பிக்காமல் முடித்துவைத்தது. இதையடுத்து, பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கான தடை நீங்கியுள்ளது.
இந்நிலையில், கொடிக் கம்பங்களை அகற்றுவதில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விலக்கு அளிக்கக் கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் சண்முகம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, விசாரணையை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆர்.விஜயகுமார், எஸ்.சவுந்தர் அமர்வு விசாரித்து, “அனைத்து கொடிக் கம்பங்களையும் ஒரே இடத்தில் நிறுவலாம். இது தொடர்பாக கட்சிகள், அமைப்புகள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
அதுவரை கொடிக் கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும்” என்று உத்தரவிட்டது. இதையடுத்து, திமுக, அதிமுக, மதிமுக, திக, விடுதலை சிறுத்தைகள், தவெக, இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் விசாரணை நிலுவையில் இருந்த நிலையில், கொடிக் கம்பங்களை அகற்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கதிரவன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.














