கவர்னரிடம் கமிஷனர் விளக்கம்

சென்னை: அக்.27-
ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸார் பாதுகாப்பு மற்றும்கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வெளியாட்களுக்கு அனுமதி கிடையாது. அனுமதி பெற்று வருபவர்களும்,பலத்த சோதனைக்குப் பிறகே ராஜ்பவனுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில், ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி `கருக்கா’ வினோத் (42) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று காலை 10.30 மணியளவில் ஆளுநர் மாளிகைக்குச் சென்று, ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தார். அப்போது, பெட்ரோல்குண்டு வீசிய ரவுடி கைது செய்யப்பட்டது குறித்தும், அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் விளக்கினார்.
மேலும், 2 நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்துள்ள குடியரசுத் தலைவருக்கு சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் காவல் ஆணையர் விளக்கியதாக கூறப்படுகிறது.
முன்னதாக, தென் சென்னை இணைஆணையர் சி.பி.சக்ரவர்த்தியும் ஆளுநரைநேரில் சந்தித்து, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் குறித்து நேரில் விளக்கம் அளித்துள்ளார்.

பாதுகாப்பு அதிகரிப்பு: இதற்கிடையில், ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு30 போலீஸார் வரை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்ட நிலையில், தற்போது ஒரு உதவி ஆணையர், 3 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 45 போலீஸார் ஆளுநர் மாளிகை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மத்திய போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ஏற்கெனவே ஆளுநர் மாளிகைக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகம்இருக்கும். தற்போது குடியரசுத் தலைவர்சென்னை வர உள்ளதால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றனர்.