
டெல் அவிவ்: அக்டோபர் : 14 இஸ்ரேல் – ஹமாஸ் போர் இன்று (சனிக்கிழமை) 8-வது நாளை எட்டியுள்ள நிலையில் இருதரப்பிலும் சேர்த்து 3000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், “காசா தாக்குதல் வெறும் ஆரம்பம்தான் இனி நடப்பதை என்னால் கூட கணித்துச் சொல்ல முடியாது” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
வெளியேறத் துடிக்கும் மக்கள்: இஸ்ரேல் 24 மணி நேரம் கெடு விதித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட காசாவிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறத் துடிக்கும் அப்பாவிப் பொதுமக்களை ஹமாஸ் தீவிரவாதிகள் தடுத்து நிறுத்திவருகின்றனர். கடைசி சொட்டு ரத்தம் சிந்தப்படும் வரை போர் தொடரும் என்று கூறி மக்களை வெளியேற வேண்டாம் எனக் கோரி வருகின்றனர். அதையும் மீறி மக்கள் தெற்கு நோக்கி முன்னேறி வருகின்றனர்.
இந்நிலையில் ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக 120 இஸ்ரேலியர்களை பிடித்துவைத்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. ஹமாஸ் தீவிரவாதிகளிடம் சிக்கியிருந்த 250 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை இஸ்ரேல் கடற்படை வீரர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) மீட்டனர். அப்போது 60 ஹமாஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மேலும் 120 இஸ்ரேலியர்கள் சிக்கியுள்ளதாகவும் அவர்களும் மீட்கப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
நெதன்யாகு எச்சரிக்கை: பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை தொலைக்காட்சியில் நிகழ்த்திய உரையில், “ஹமாஸ் தாக்குதலில் 1300 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். அதற்கு முதலடிதான் காசா மீதான தாக்குதல். இதுதொடக்கம் தான் இன்னும் தரைவழித் தாக்குதல் இருக்கிறது. காசா எல்லையை நோக்கி ஆயிரக்கணக்கான வீரர்கள் விரைந்துள்ளனர். இனி என்ன நடக்கும் என்று என்னால் சொல்ல முடியாது.