காய்ச்சல் தொற்று தடுக்க நடவடிக்கை

பெங்களூர் மார்ச் 6
நாட்டில் வேகமாக பரவி வரும் தொற்று காய்ச்சல் கர்நாடக மாநிலத்தில் பரவுவதை தடுக்க மருத்துவ நிபுணர்களுடன் கர்நாடக அரசு ஆலோசனை நடத்தியது. கர்நாடக மாநில மருத்துவ கல்வித் துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் தலைமையில் இன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. இதில் நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் எச்3 என்2 வைரஸ் காய்ச்சல் தற்போது அண்டை மாநிலங்களான தமிழ்நாடு ஆந்திரா கேரளாவில் பரவி வருகிறது. கர்நாடக மாநிலத்திலும் இந்த காய்ச்சல் ஊடுருவி உள்ளது. இந்த நிலையில் இது மேலும் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக இன்ஃப்ளுயன்சா எச்3என்2 வைரஸ் (Influenza H3N2) பாதிப்பு அதிகரித்து வருகிறது
இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் என்பது வைரஸ் காய்ச்சல். அதாவது, பரவக் கூடிய வைரஸ் காய்ச்சல். லேசான சளி, லேசான தொண்டை வலி, லேசான இருமல் என்று இதன் பாதிப்புகள் இருக்கலாம். சில நேரங்களில் பாதிப்பு தெரியாமல் கூட இருக்கலாம். லேசான காய்ச்சலாகத் தொடங்கி தீவிர காய்ச்சலாக பாதிப்பை ஏற்படுத்தலாம்.தற்போது இன்ஃப்ளுயன்சா எச்3என்2 வைரஸ் அதிக அளவில் பரவி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 30 சோதனை மையங்களில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அறிக்கையை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவர்களில் 92 சதவீதம் பேருக்கு காய்ச்சல், 86 சதவீதம் பேருக்கு இருமல், 27 சதவீதம் பேருக்கு சுவாசக் கோளாறு அறிகுறிகள் உள்ளன. தீவிர பாதிப்பை சந்திப்பவர்களில் 10 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறது. 7 சதவீதம் பேருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள செய்ய வேண்டியவை; செய்யக்கூடாதவை குறித்து ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. செய்ய வேண்டியவை: கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் | கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் | இருமல், தும்மல் வரும்போது மூக்கு மற்றும் வாயை மூடிக் கொள்ள வேண்டும் | கைகளால் கண் மற்றும் மூக்கை தொடக் கூடாது.செய்யக் கூடாதவை: மற்றவர்களுடன் கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும் | பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது | மருத்துவர்கள் அனுமதி இல்லாமல் ஆன்டிபயாடிக் மருத்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது