
புதுடெல்லி,செப்.19-
ஜிஎஸ்டி குறித்தும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்தும் ராஜ்யசபாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அவருக்கு பதிலடி கொடுத்தார்.
புது பாராளுமன்றத்தில் ராஜ்யசபா கூடியதும், மல்லிகார்ஜூன கார்கே
பேசியதாவது: தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால், பலவீனமான பெண்களையே அரசியல் கட்சிகள் தேர்வு செய்கின்றன.

கல்வியறிவு
பெற்றவர்கள், எதிர்த்து
போராடக்கூடியவர்களை எந்த கட்சியும் தேர்வு செய்வது இல்லை என்றார். இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நாங்கள் எதிர்க்கட்சி தலைவரை மதிக்கிறோம். ஆனால், அனைத்துக் கட்சிகளும் திறமையற்ற பெண்களையே தேர்வு செய்கின்றன என அவர் கூறுவதை ஏற்க முடியாது.
நாங்கள் அனைவரும், பா.ஜ.,வால், பிரதமரால் அதிகாரம் பெற்றுள்ளோம். ஜனாதிபதி திரவுபதி முர்முவும் அதிகாரம் பெற்ற பெண். பா.ஜ., பெண் எம்.பி.,க்கள் அனைவரும் அதிகாரம் பெற்றவர்கள் தான். கார்கேவின் கருத்து, பெண்கள் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு வேண்டுமானால் பொருந்தலாம். அதற்காக அனைத்து கட்சிகளையும் பொதுவாக குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். இதன் பிறகு கார்கே பேசுகையில்,
நிர்மலா சீதாராமனுக்கு கிடைத்த வாய்ப்புகள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கிடைப்பதில்லை என்றார்.
இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன், ஜனாதிபதி யார்? எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு மக்களை அவமானப்படுத்துவதை என்னால் ஏற்க முடியாது. பெண்கள் இடையே வேறுபடுத்தி பார்க்கக்கூடாது என்றார். ஜிஎஸ்டி குறித்து மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், மாநிலங்களுக்கு உரிய இழப்பீடு சரியாக கிடைப்பது இல்லை. கூட்டாட்சி தத்துவம் பலவீனமாகி வருகிறது என்றார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த நிர்மலா சீதாராமன், எந்த மாநிலத்திற்கும் ஒரு ரூபாய் கூட
பாக்கி இல்லை என்றார்.