குழந்தைகள் திருடும் கும்பல் கைது

புதுடெல்லி: மே 26- சுமார் 50 குழந்தைகளை திருடி 4 மாநிலங்களில் விற்பனை செய்த 10 பேர் கும்பல் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளது. தமிழரான வாரணாசி ஏசிபி டி.சரவணன் தலைமையில் துப்பு துலக்கியப் படைக்கு பாராட்டுகள் குவிகின்றன.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியின் பேலுபூரில் கடந்த மே 14-ம் தேதி நான்கு வயது ஆண் குழந்தை காணாமல் போனது. சாலையோரம் வசிக்கும் இதன் குடும்பத்தினர் இரவில் உறங்கும்போது குழந்தை திருடப்பட்டது.
குழந்தையை அதன் பெற்றோர் பல நாட்கள் தேடியும் கிடைக்காமல், பேலுபூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அவர்களிடம் வாரணாசி குற்றப்பிரிவு உதவி ஆணையரான (ஏசிபி) சரவணன், எனும் தமிழர் நேரடியாக விசாரணை நடத்தினார். வாரணாசி நகர சாலைகளின் சிசிடிவி பதிவுகளிலும் அவர் கவனமாகத் தேடியுள்ளார்.
இதில், திருடப்பட்ட குழந்தையை காரில் கொண்டுசென்ற ஓட்டுநர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், ஷிக்கா எனும் பெண் தலைமையில் பெரிய திருட்டுக் கும்பல் செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து ஏசிபி சரவணன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புப் படை புலனாய்வில் இறங்கியது. உ.பி., ஜார்க்கண்ட், பிஹார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இக்குழு விசாரணை நடத்தியது. இதன் முடிவில் குழந்தைகளை கடத்தி 4 மாநிலங்களில் விற்பனை செய்யும் கும்பல் சிக்கியது.
இவர்களில் ஒரு தம்பதியான சன்ந்தா, சஞ்சய் அளித்த புகாரை ஏசிபி சரவணன் விசாரித்ததால் இக்கும்பல் சிக்கியுள்ளது.
இவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதியில் சிக்கியதால், ஏசிபி சரவணன் தலைமையிலான புலனாய்வு படைக்கு பாராட்டுகள் குவியத் தொடங்கியுள்ளன.பட்டதாரியான டி.சரவணன், 2019 பேட்ச்-ல் உ.பி. மாநில அதிகாரியானவர்.