சூரியனின் எல் 1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல் 1 விண்கலம்

பெங்களூரு,செப்டம்பர். 19 – சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2ம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்தது. பின்னர், புவிவட்டப்பாதையில் தனது பயணத்தை தொடங்கிய விண்கலத்தின் உயரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 4 முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் இன்று அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று அதிகாலை 2.00 மணியளவில் விண்கலத்தின் உயரம் 5வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரோ தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “ஆதித்யா-எல்1 மிஷன்: சன்-எர்த் எல்1 பாயிண்டிற்குச் சென்றது..!! Trans-Lagrangean Point 1 Insertion (TL1I) சுற்றுப்பாதை வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டது.
விண்கலம் இப்போது சூரியன்-பூமி L1 புள்ளிக்கு எடுத்துச் செல்லும் பாதையில் உள்ளது. இது சுமார் 110 நாட்களுக்குப் பிறகு ஒரு முயற்சியின் மூலம் எல்1 சுற்றுப்பாதையில் செலுத்தப்படும். இஸ்ரோ ஒரு பாதையில் உள்ள ஒரு பொருளை மற்றொரு வான உடல் அல்லது விண்வெளியில் உள்ள இடத்திற்கு வெற்றிகரமாக மாற்றுவது இது தொடர்ந்து ஐந்தாவது முறையாகும்” என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.