ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் இந்தியா வருகை

புதுடெல்லி,பிப்.25-
இந்தியா-ஜெர்மனி இடையே அரசுகளுக்கு இடையேயான ஆலோசனை நெறிமுறை கடந்த 2011-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன்படி இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் பல்வேறு துறை அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த அமைப்பு உருவாக்கிய பிறகு முதல் முறையாக தனிநபர் பயணமாக ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் இன்று (சனிக்கிழமை) காலை இந்தியா வருகிறார். அவரது இந்த 2 நாள் பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. டெல்லி வந்திறங்கும் அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின், ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசுகிறார். அப்போது பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு தரப்பிலும் ஒப்பந்தங்கள் கைமாறப்படுகின்றன. அத்துடன் கூட்டாக அறிக்கையும் வெளியிடப்படுகிறது பிரதமர் மோடியுடனான சந்திப்பை தொடர்ந்து ஐதராபாத் இல்லத்தில் நடைபெறும் வர்த்தக சந்திப்பு ஒன்றில் ஓலாப் ஸ்கோல்ஸ் பங்கேற்கிறார். பிற்பகல் ராஜ்காட் செல்லும் ஜெர்மனி பிரதமர், அங்கு மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்துப் பேசுகிறார். தனது 2-வது நாள் (26-ம்தேதி) பயணத்திலும் ஜெர்மனி பிரதமர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்படி அன்று காலையில் பெங்களூரு வருகிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். பின்னர் இந்த பயணத்தை முடித்துக்கொண்டு மாலையில் அவர் ஜெர்மனி திரும்புகிறார்.