
புதுடெல்லி, அக். 29- டெல்லியில் நேற்று மேக விதைப்பு நடைமுறை மூலம் செயற்கை மழை பெய்விக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக டெல்லியில் காற்று மாசு கணிசமாக அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கட்டுமானப் பணியின்போது உரிய விதிகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் பிஎஸ்-6 சரக்கு வாகனங்கள் மட்டுமே டெல்லிக்குள் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் நேற்றைய கணக்கீட்டின்படி காற்று தரக் குறியீடு 315 புள்ளிகளாக இருந்தது. இந்த காற்றை சுவாசித்தால் பொதுமக்களின் உடல் நலனுக்கு அதிக தீங்கு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர். இந்த சூழலில் காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லியில் செயற்கை மழையை பெய்விக்க முதல்வர் ரேகா குப்தா உத்தரவிட்டார். இதற்காக கான்பூர் ஐஐடியின் உதவி கோரப்பட்டது. டெல்லி அரசு மற்றும் கான்பூர் ஐஐடி இணைந்து டெல்லியில் நேற்று செயற்கை மழையை பெய்விக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.















