புதுடெல்லி, செப்டம்பர் 26- தமிழகத்திற்கு அடுத்த 18 நாட்களுக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரில் பந்த் நடந்து வரும் நிலையில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு மீண்டும் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளது கர்நாடக அரசை மேலும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.
காவேரி ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. தமிழகத்தின் பிலிகொண்டலுவுக்கு அடுத்த மாதம் 15ம் தேதி வரை 3000 கனஅடி தண்ணீர் திறக்க இந்தக் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் 161 தாலுகாக்கள் கடும் வறட்சி மற்றும் 34 தாலுகாக்கள் மிதமான வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில் தண்ணீர் திறக்க முடியாது என மேற்கண்ட கூட்டத்தில் கர்நாடக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 123 டிஎம்சி தண்ணீர் விட வேண்டியிருந்தது. கர்நாடகா இதுவரை 40 டிஎம்சி தண்ணீரை திறந்து விட்டது. இதனால் மீதமுள்ள 83 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என தமிழகம் வலியுறுத்தியது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு காவேரி ஒழுங்காற்று
குழு எக்காரணம் கொண்டும் தண்ணீரின் அளவைக் குறைக்கக் கூடாது. அக்டோபர் மாதத்தில் 22 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும். கர்நாடகாவுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட காவேரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு 3000 கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டதுடன், தமிழகத்தின் 12 ஆயிரம் கன அடி தண்ணீர் கோரிக்கையை நிராகரித்தது.