
ராமேசுவரம்: அக்டோபர் 10-
தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த மீனவர்களின் 5 படகுகளை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், அதிலிருந்த 47 மீனவர்களை கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
அன்று இரவு தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஹரிகிருஷ்ணன், ஜோசப், நெப்போலியன், ஜெபமாலை ராஜா ஆகியோருக்குச் சொந்தமான 4 விசைப்படகுகளை, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.மேலும், படகுகளில் இருந்த 30 மீனவர்களை கைது செய்து, தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். பின்னர், அனைவரையும் மீன்வளத் துறையினரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை அக். 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசு வரம் மீனவர்களில் ஒருவரான முனியராஜிடமிருந்து 30 கிராம் கஞ்சாவை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அவர் தனது சொந்த பயன்பாட்டுக்காக கஞ்சாவை வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.17 மீனவர்கள் கைது… அதேபோல, நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த விஜயன் சிவராமன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும், அதிலிருந்த 17 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். பின்னர், 17 மீனவர்களும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.















