சென்னை: ஜூன் 28 –
வயநாடு நிலச்சரிவு நடந்து ஓராண்டாகும் நிலையில், இனியும் தாமதிக்காமல், நாடு முழுதும் நிலச்சரிவு ஆபத்துள்ள பகுதிகள் விபரத்தை வெளியிடுமாறு, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில், 2024 ஜூலை 30ம் தேதி அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில், 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சுற்றுச்சூழல் விதிகளை மீறி, மரங்களை வெட்டி கட்டடங்கள் கட்டப்பட்டதும், குவாரிகள் செயல்பட்டதுமே, நிலச்சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
சுற்றுலா மேம்பாட்டுக்காக அரசு மேற்கொள்ளும் சாலை, மேம்பால பணிகளும் சூழலியலை அழிப்பதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக, தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து விசாரித்த தீர்ப்பாயம், ‘வரும் காலங்களில் நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
மேற்கு தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க, மாதவ் காட்கில், கஸ்துாரி ரங்கன் ஆகியோர் தலைமையில் கமிட்டிகள் அமைக்கப்பட்டன. ‘மேற்கு தொடர்ச்சி மலைகளை, நிலச்சரிவு அபாயம் உள்ள மூன்று சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களாக வகைப்படுத்த வேண்டும்.
மேற்கு தொடர்ச்சி மலையின் மொத்த பரப்பில், 37 சதவீதத்தை சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கலாம்’ என்று, கஸ்துாரி ரங்கன் கமிட்டி பரிந்துரைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
கடந்த மார்ச் 28ல் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின்படி, வயநாடு நிலச்சரிவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், கேரள அரசும் அறிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், கேரள அரசு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரியுள்ளார்.
சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் தொடர்பான இறுதி அறிவிப்பு, ஆகஸ்ட் மாதத்திற்கு முன் தாக்கல் செய்யப்படும் என, மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற அமைச்சகம் சார்பில், ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
வயநாடு நிலச்சரிவு நடந்து ஓராண்டு கடந்தும், நிலச்சரிவு ஆபத்துள்ள பகுதிகளை அறிவிக்காதது கவலைக்குரியது. இதுதொடர்பாக, மாதவ் காட்கில் மற்றும் கஸ்துாரி ரங்கன் ஆகியோர், ஏற்கனவே விரிவான ஆய்வுகள் நடத்தியுள்ளனர். அவர்களின் ஆய்வறிக்கையை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்கலாம்.
எனவே, அவசர நடவடிக்கை தேவைப்படும் மாநிலங்களில், நிலச்சரிவு ஆபத்துள்ள பகுதிகளை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் இறுதி அறிவிப்பை வெளியிட, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தன் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, ஆகஸ்ட் 11ல் நடக்கும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.