நேரு ஆற்றிய பங்கினை பா.ஜ.க.வால் ஜீரணிக்க முடியவில்லை – ஜெய்ராம் ரமேஷ்

புது டெல்லி,ஆக.28- இந்தியா, கடந்த 23-ந் தேதி நிலவின் தென்துருவத்தில் இறங்கி வரலாறு படைத்தது. இதன்மூலம் உலக நாடுகளின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது. தற்போது இந்தியாவின் சந்திரயான்-3 சாதனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதனிடையில் பா.ஜ.க.வினர், இஸ்ரோவின் அபரிமிதமான இந்த வளர்ச்சிக்கு பிரதமர் மோடி தான் காரணம் என புகழாரம் சூட்டி வருகின்றனர். அதே வேளையில் அவர்கள், முன்னாள் காங்கிரஸ் பிரதமர்களை விமர்சித்தும் வருகின்றனர். மேலும் அவர்கள், முன்னாள் காங்கிரஸ் பிரதமர்கள் இஸ்ரோவின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றவில்லை எனவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுபோன்ற கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், “நேரு அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தார். இஸ்ரோ அமைப்பதற்கு நேரு ஆற்றிய பங்கினை ஜீரணிக்க முடியாதவர்கள், டி.ஐ.எப்.ஆர். தொடக்க விழாவில் அவர் பேசிய உரையை கேளுங்கள்.” இவ்வாறு அதில் குறிப்பிட்டு வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார்.