பயணிக்கு அசைவம் வழங்கிய விமான நிறுவனம்.. மூச்சு திணறி பலி

கொழும்பு: அக்டோபர் 9-
கத்தர் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த 85 வயது முதியவர் சைவ உணவு கோரிய போதிலும் அவருக்கு அசைவ உணவு வழங்கப்பட்டுள்ளது. இறைச்சியை தவிர்த்துவிட்டு மற்றவற்றை சாப்பிடுமாறு சொல்லியுள்ளனர். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து இலங்கையின் கொழும்பு நோக்கிச் சென்ற விமானத்தில் 85 வயது முதியவர் பயணித்துள்ளார். தெற்கு கலிபோர்னியாவை சேர்ந்த ஓய்வுபெற்ற இருதயநோய் நிபுணரான டாக்டர் அசோக ஜெயவீரா கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் சென்றுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து இருந்து இலங்கை செல்ல 15.5 மணி நேரம் ஆகும்.
சைவ உணவுக்கு பதில் அசைவம்
இந்த பயணத்தில் அவர் தனக்கு சைவ உணவு தான் வேண்டும் என சொல்லி புக் செய்துள்ளார். இருப்பினும், விமானப் பணிப்பெண் ஒருவர் சைவ உணவு இல்லை என்று கூறி, அசைவ உணவை வழங்கியுள்ளார். அசைவ உணவில் இருந்த இறைச்சியை தவிர்த்துவிட்டு மற்றவற்றை மட்டும் சாப்பிடுமாறு விமானப் பணிப்பெண் அந்த முதியவரிடம் கூறியுள்ளார்.
அவரும் ஓகே என சொல்லி, இறைச்சியை தவிர்த்துவிட்டு சாப்பிட முயன்றுள்ளார். அப்போது ஜெயவீராவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். விமான ஊழியர்கள் உதவிக்கு விரைந்தனர். மெட்ஏர் நிறுவனத்தின் மருத்துவ நிபுணர்களும் டெலி ஆலோசனை வழங்கினர். இருப்பினும், ஜெயவீராவின் உடல்நிலை மோசமடைந்தது.
இதையடுத்து, விமானம் ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கில் தரையிறங்கியது. உயிரிழப்பு ஜெயவீரா உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்தார். உணவு அல்லது திரவம் நுரையீரலுக்குள் போனதாகவும் இதனால் ஏற்பட்ட ‘ஆஸ்பிரேஷன் நிமோனியா’ என்ற நுரையீரல் தொற்று காரணமாகவே அவர் உயிரிழந்தார். அதாவது சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவை விமான குழு கொடுத்த நிலையில், அது தவறுதலாக நுரையீரலுக்கு சென்று அதனால் ஏற்பட்ட ஆஸ்பிரேஷன் நிமோனியா காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார்.
இழப்பீடு கேட்டு வழக்கு இந்தச் சம்பவம் 2023ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி நடந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, ஜெயவீராவின் மகன் சூர்யா ஜெயவீரா, கத்தர் ஏர்வேஸ் மீது கவனக்குறைவான சேவை மற்றும் மருத்துவ உதவி வழங்கத் தவறியதாகக் குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். இதன் காரணமாகவே இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே புக் செய்த சைவ உணவை வழங்கத் தவறியது, அவசர கால மருத்துவ உதவியை வழங்காதது என கத்தார் ஏர்வேஸ் மீது சூர்யா ஜெயவீரா புகாரளித்திருந்தார்.
இதனால் குறைந்தபட்ச இழப்பீட்டு தொகையாக $128,821 வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச விமான பயணங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான விதிகள் மாண்ட்ரீல் மாநாட்டில் விதிக்கப்பட்டிருந்தது.
மாண்ட்ரீல் மாநாட்டின் உறுப்பினர்களாக கத்தரும் அமெரிக்காவும் இருப்பதால், அதன் விதிகள் கத்தார் ஏர்வேஸுக்கும் பொருந்தும் என சுட்டிக்காட்டியே அவர் இழப்பீடு கோரிக்கை விடுத்துள்ளார்.