
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு மந்திரியாக இருந்த சுப்ரதா சஹா கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். அதனால், அவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட முர்ஷிதாபாத் மாவட்டம் சாகர்டிகி சட்டசபை தொகுதிக்கு கடந்த 27-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேபாஷிஷ் பானர்ஜியும், பா.ஜனதா சார்பில் திலீப் சஹாவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளராக பேரோன் பிஸ்வாசும் போட்டியிட்டனர். நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் பேரோன் பிஸ்வாஸ் முன்னிலையில் இருந்தார். இறுதியில், அவர் 22 ஆயிரத்து 980 ஓட்டுகள் வித்தியாசத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார். பா.ஜனதா வேட்பாளர் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதனால், கடந்த 2 ஆண்டுகளாக சட்டசபையில் பூஜ்யமாக இருந்த காங்கிரஸ் கட்சி, முதல்முறையாக தனது கணக்கை தொடங்குகிறது. அதே சமயத்தில், இந்த தோல்வி, திரிணாமுல் காங்கிரசுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் இருந்து அத்தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில், 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அக்கட்சி வெற்றி பெற்றிருந்தது. அத்தகைய தொகுதியில், தற்போது தோல்வியை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.