
பெங்களூரு, மார்ச்13- தார்வார் ஐ.ஐ.டி. வளாகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அந்த வளாகத்தை திறந்து வைத்து பேசியதாவது: நான் பகவான் பசவேஸ்வராவின் மண்ணுக்கு வந்துள்ளேன். இதனால் நான் ஆசிர்வதிக்கப்பட்டராக உணர்கிறேன். பசவேஸ்வரா இந்த சமுதாயத்திற்கு பல்வேறு பங்களிப்புகளை வழங்கினார். அதில் அனுபவ மண்டபத்தை அமைத்தது முக்கியத்துவம் வாய்ந்தது. 12-வது நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்த ஜனநாயக அமைப்பு குறித்து உலக அளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற பல்வேறு விஷயங்கள் உள்ளன. அதனால் தான் இந்தியா பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாயாகவும் திகழ்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் நான் பசவவேஸ்வராவின் சிலையை திறந்து வைத்தேன். அது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் ஆகும். பசவேஸ்வராவின் சிலை லண்டனில் இருக்கும் நிலையில், அதே லண்டனில் இந்தியாவின் ஜனநாயகம் குறித்து சில கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஹை-டெக் இந்தியாவின் என்ஜின், கர்நாடகம். இந்த என்ஜின் இரட்டை என்ஜின் அரசின் பலத்தைப் பெற வேண்டிது முக்கியம் என தெரிவித்தார்.