புதினுக்கு கைது வாரண்ட் ரஷ்யா கருத்து

மாஸ்கோ, மார்ச் 18-
உக்ரைன் நாடு மீது ரஷியா படையெடுத்து கடந்த பிப்ரவரியுடன் ஓராண்டு கடந்து உள்ளது. அந்நாட்டுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை உள்ளிட்ட தடைகளை விதித்தும் போரை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. சர்வதேச அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி, ரஷியா தொடர்ந்து போரை நீட்டித்து வருகிறது. இந்நிலையில், போரில் தீவிர கவனம் செலுத்தி வரும் ரஷியா, உக்ரைனில் உள்ள குழந்தைகளை மீட்டு ரஷியாவுக்கு நாடு கடத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது என கூறப்படுகிறது. இதற்கு சர்வதேச குற்ற நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஓராண்டுக்கும் மேலாக உக்ரைனில் நடந்து வரும் போரில், ரஷிய படைகள் போர் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றன என்றும் அதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினே பொறுப்பு என்றும் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து, அதிபர் புதின் மற்றும் ரஷிய அதிகாரியான மரியா அலெக்சீயேவ்னா வோவா-பெலோவா ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் உத்தரவையும் பிறப்பித்து உள்ளது. இதுபற்றி ரஷியாவின் வெளிவிவகார அமைச்சக பெண் செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறும்போது, சர்வதேச குற்ற நீதிமன்றத்தில் ஓர் உறுப்பினராக ரஷியா இல்லை. இந்த அமைப்புடன் ரஷியா ஒத்துழைப்பிலும் இல்லை. அதனால், சர்வதேச குற்ற நீதிமன்றத்தில் இருந்து வரும் கைது வாரண்டும் சட்டப்படி செல்லத்தக்கதல்ல. அது எங்களை ஒன்றும் செய்யாது. அதனால், அந்த கைது வாரண்டில் அர்த்தம் இல்லை என அறிவித்து உள்ளார்.