சென்னை: அக்டோபர் .24 அரபிக்கடலில் உருவான தேஜ் புயல் அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணிக்குள் கரையை கடந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் தேஜ் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றிருந்த நிலையில் இன்று அதிகாலை கரையை கடந்தது. தேஜ் புயல் மிக தீவிர புயலாக வலுவிழந்து இன்று அதிகாலை ஏமன் அருகே கரையை கடந்தது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபி கடல் பகுதிகளில் புயலாக உருவெடுத்தது. தென்மேற்கு அரபி கடலில் உருவாகிய இந்த புயலுக்கு ‘தேஜ்’ என பெயரிடப்பட்டது.
இந்த நிலையில், இந்த புயல் தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் அதி தீவிர புயலாக மாறி ஏமன், ஓமன் நாடுகளை நோக்கி நகர்ந்து வந்தது. இந்நிலையில் அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த தேஜ் புயலானது, ஏமன் நாட்டின் கடற்கரையில் இன்று அதிகாலை 2.30 முதல் 3.30 க்குள் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புயலானது கரையை கடக்கும் போது 125-135 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாகவும் தெரிவித்துள்ளது.