பெங்களூரு, செப்டம்பர் 23- தொட்டபள்ளப்பூரில் உள்ள பால் பண்ணை முன்புறம் மரத்தின் கிளைகளுக்கு இடையே சிக்கிய பூனைக்குட்டியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொட்டபள்ளாபூர் இஸ்லாம்பூரை சேர்ந்த ரோஷன் (21) என்பவரே உயிரிழந்தவர்.கடந்த 2 ஆண்டுகளாக கேரேஜில் பணிபுரிந்து வந்தார்.விலங்குகள் மீது பிரியம் கொண்ட இவர் கேரேஜ் அருகே கோழி மற்றும் பூனை வளர்த்து வந்தார். கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போன பூனைக்குட்டி நேற்று மதியம் மரக்கிளைகளுக்கு இடையில் சிக்கியிருந்தது. மரத்தின் கிளைகளில் இருந்து காப்பாற்றுவதற்காக மரத்தின் மீது ஏறிய ரோஷன், அவ்வழியே சென்ற மின் கம்பியில் அடிபட்டு மரத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த தொட்டபள்ளாப்பூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மரத்தில் இருந்து கீழே இறக்கி வழக்குப் பதிவு செய்தனர்.
மரத்தின் கிளைகளுக்கு இடையே பூனை சிக்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரோஷன், மேலே மின் கம்பி இருந்ததை கவனிக்கவில்லை. மரத்தின் ஓரமாக 11 கிலோ வோல்ட் மின்சார வயர் அறுந்து சென்றுள்ளது. மரத்தின் கிளை என நினைத்து மரத்தின் மீது ஏறி மின்சார வயரை கையில் பிடித்தவர் மின்சாரம் தாக்கி அங்கு உயிரிழந்ததாக கராஜ் உரிமையாளர் இடையத் தெரிவித்தார்.