பெங்களூரு: ஜூன் 20 –
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி முதல் முறையாக வெற்றி பெற்றது. சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து மத்திய அரசிடம் கர்நாடக அரசு இன்று அறிக்கை தாக்கல் செய்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் பெங்களூர் அணி முதல் முறையாக வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. பெங்களூர் அணியின் வீரர்களுக்கு விதான சவுதாவில் முதல்வர் சித்தராமையா மற்றும் கவர்னர் தாவர்சந்த் கெலாட் முன்னிலையில் பாராட்டு விழா நடைபெற்றது. அன்றைய தினத்தன்று மாலை 5 மணிக்கு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பெங்களூர் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
விராட் கோலி, ரஜத் படிதார் உள்ளிட்ட வீரர்கள் விதான சவுதாவில் இருந்து சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திற்கு திறந்த பேருந்தில் ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு பிரச்சனை காரணமாக அந்த ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது. அதேசமயம் சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பெங்களூர் கிரிக்கெட் அணியைப் பார்ப்பதற்காக லட்சக்கணக்கானோர் அங்கு திரண்டதால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்கள் பலர் முண்டியடித்துக் கொண்டு கிரிக்கெட் வீரர்களை காணச் செல்ல முயன்றனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே நேரத்தில் சுமார் 3 லட்சம் பேர் அங்கு குவிந்ததால் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதையடுத்து, பெங்களூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். மேலும், இந்த விவகாரத்தில் பெங்களூரு காவல் ஆணையரான தயானந்த், கூடுதல் காவல் ஆணையர் விகாஸ்குமார், துணை காவல் ஆணையரான சேகர் ஆகிய 3 ஐபிஎஸ் அதிகாரிகளை கர்நாடக அரசு பணியிடை நீக்கம் செய்தது.
3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து மத்திய அரசுக்கு கர்நாடக அரசு தகவல் தெரிவித்திருந்தனர். ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து கர்நாடக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருந்த நிலையில், இன்று மத்திய அரசிடம், கர்நாடகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.