பெண்களுக்கு ரூ.12,000, ரூ.500-க்கு காஸ் சிலிண்டர்: சத்தீஸ்கரில் பாஜக தேர்தல் வாக்குறுதி

ராய்ப்பூர், நவ. 4-சத்தீஸ்கரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 7 மற்றும் 17-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் சத்தீஸ்கரின் குஷாபாவ் தாக்ரே பரிசர் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில், ‘மோடியின் 2023-ம் ஆண்டு உத்திரவாதம்’ என்ற பெயரில் பாஜக.வின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது-திருமணமான பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 நிதி யுதவி அளிக்கப்படும். சத்தீஸ்கரில் 2 ஆண்டுகளில் ஒரு லட்சம் அரசு காலி பணி யிடங்கள் நிரப்பப்படும். ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு சமையல் காஸ் சிலிண்டர் ரூ.500-க்கு வழங்கப்படும்.கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு, பயணப்படி அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
பிரதமரின் வீட்டு வசதி திட்டத் தின் கீழ் 18 லட்சம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 2 ஆண்டுகளில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும். தீன்தயாள் உபாத்யாய் கிரிஷி மஜ்தூர் திட்டத்தின் கீழ் நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும்.கிரிஷி உன்னதி திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து ஏக்கருக்கு 21 குவிண்டால் நெல் தலா ரூ.3,100-க்கு கொள்முதல் செய்யப்படும்.அயோத்தியில் ராமர் கோயிலை பார்வையிட மக்கள் அழைத்துச் செல்லப்படுவர். இவ்வாறு தேர்தல் அறிக்கையில் பாஜக தெரிவித்துள்ளது.