
பெங்களூர் : பிப்ரவரி. 27 . குடிக்கவேண்டாம் என புத்திமதி சொன்னதற்கு கோபமடைந்த ஒருவன் மரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நாகரபாவியின் பாப்பரெட்டி பால்யா சர்க்கிள் அருகில் நடந்துள்ளது. சென்னபட்டனா தாலூகாவின் மாதேவா (40) தற்கொலை செய்துகொண்டவர். நேற்று இரவு 11 மணியளவில் மாதேவா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் யசோதம்மா என்பவருடன் திருமணமாகியிருந்த நிலையில் மாதேவா தினசரி குடித்து விட்டு வந்து வீட்டில் கலாட்டா செய்து வந்துள்ளார்.கணவனின் இதை தொல்லையால் யசோதம்மா பல முறை போலீசிலும் புகார் அளித்துள்ளார். போலீசார் அழைத்து புத்திமதி கூறியிருப்பினும் மாதேவா தன்னை திருத்திக்கொள்ளவில்லை . நேற்று காலை யசோதம்மா தன் கணவனுக்கு 150 ரூபாய் கொடுத்ததில் அதை வைத்து மூச்சு முட்ட குடித்துவிட்டு மாலை மனைவியுடன் மீண்டும் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் யசோதம்மா போலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். வீட்டுக்கு வந்த போலீசார் மாதேவாவுக்கு புத்திமதி சொல்லி சென்றுள்ளனர். இது நடந்த பின்னர் மாதேவா பொது இடத்தில் மக்கள் நடமாடுவதையும் கணக்கில் கொள்ளாமல் நேராக பாப்பரெட்டி பால்யா சர்க்கிலுக்கு வந்து அங்குள்ள மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தான் அணிந்திருந்த வேஷ்டியிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் இவருடைய உடலை பார்த்த உள்ளூரார் போலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதற்க்கு முன்னர் இரண்டு திருமணம் செய்து கொண்டிருந்த மாதேவா பின்னர் மூன்றாவது முறையாக யசோதாம்மாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். குழந்தைகள் ஊரில் படித்து வருகிறார்கள். ஓட்டல் வேலை செய்து கொண்டு யசோதம்மா கணவனை காப்பாற்றி வந்துள்ளார். சம்பவ இடத்திற்கு அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசார் வந்து பரிசீலனை செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.