
புதுடெல்லி: செப். 19: நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பல வருடங்களாக நிலுவையில் இருந்த நிலையில் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் ஆகலாம். குறிப்பாக இன்று தொடங்கிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரிலேயே மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி பேசியிருந்த நிலையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநிலங்களைவையில் இந்த மசோதா ஒப்புதல் பெற்றுள்ளது என்பதால் இனி மக்களவையில் ஒப்புதல் பெற வேண்டியது இருக்கும். திருத்தங்கள் இருப்பினும், அந்த திருத்தங்களுக்கு மாநிலங்களைவையில் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் ஏற்படும்.
முன்னதாக, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்துக்குப்பின் பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது என்றார்.
2029 முதல் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்
2026 ஆம் ஆண்டு தொடங்கும் பத்தாண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறுவடிவமைக்கப்பட்ட பின்னர் 2029 ஆம் ஆண்டிற்குள் முன்மொழியப்பட்ட பெண்களுக்கான இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய அரசின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த மசோதா முதலில் 1996 இல் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் மார்ச் 2010 இல் ராஜ்யசபாவால் நிறைவேற்றப்பட்டது, ஆனால் லோக்சபா அதை நிறைவேற்றத் தவறியதால் மசோதா நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
பல தசாப்தங்களாக நிலுவையில் உள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை காங்கிரஸ் கட்சி வரவேற்று, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மசோதாவை தாக்கல் செய்து, மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரித்தது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறும் நேரம் வந்துவிட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
1966 முதல் பெண்களுக்கு சட்டப் பேரவைகளில் இடஒதுக்கீடு வழங்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவை தோல்வியடைந்தன. 2010ல் அப்போதைய யுபிஏ அரசு ராஜ்யசபாவில் மசோதாவை நிறைவேற்றி வெற்றி பெற்றது, ஆனால் கூட்டணி கட்சிகளின் அழுத்தம் காரணமாக லோக்சபாவில் மசோதா தாக்கல் செய்யப்படவில்லை.
மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எழுதிய கடிதம் தற்போது வைரலாக பரவி வரும் நிலையில், மகளிர் இடஒதுக்கீட்டை நிபந்தனையின்றி ஆதரிக்க வேண்டும் என்று ராகுல் நீண்ட நாட்களுக்கு முன்பே கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்தில், பாஜக மசோதாவை அப்போதைய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி ஆதரித்ததாகவும், வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த கடிதம் எல்லா இடங்களிலும் வைரலாகி வருகிறது.