மீண்டும் அபாய கட்டத்தை தாண்டிய யமுனை நதி நீர்மட்டம்

புதுடெல்லி, ஆகஸ்ட். 16 -யமுனை நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான, புதுடெல்லி, இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், அரியானா உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக, கொட்டி தீர்த்த கனமழையால், யமுனை நதியின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவை தாண்டி உள்ளது. நேற்று மாலை 6:00 மணி நிலவரப்படி, யமுனை நதியின் நீர்மட்டம், 205.39 மீட்டராக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் பெய்த பருவமழையின்போது 208.66 மீட்டராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
யமுனை நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், புதுடெல்லியின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வழிந்தோடி வருகிறது.
ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், புதுடெல்லியின் பல்வேறு இடங்களில், குடிநீர் வினியோகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.