மும்பை – அகமதாபாத்துக்கு விரைவில் புல்லட் ரயில்

பாவ்நகர், ஆகஸ்ட் 4- மும்பை – அகமதாபாத் இடையே விரைவில் புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிரா தலைநகர் மும்பை – குஜராத்தின் அகமதாபாத் நகரங்களுக்கு இடையிலான புல்லட் ரயில் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தார். 2017 செப்டம்பரில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
கடந்த 8 ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. ஜப்பானிய தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் புல்லட் ரயில் திட்டத்தின் திட்ட மதிப்பீடு ரூ.2 லட்சம் கோடி ஆகும். மும்பை – அகமதாபாத் இடையே 508 கி.மீ. தூரத்துக்கு அதிநவீன தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 12 ரயில் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இத்திட்டத்துக்காக ஜப்பானில் 2 சின்கான்சென் ரக புல்லட் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் இதன் சோதனை ஓட்டம்நடந்து வருகிறது. இந்த புல்லட் ரயில்கள் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியவை.