
சென்னை: அக். 12-டல்நலக்குறைவால் உயிரிழந்த ஆயுள் தண்டனைக் கைதி ரவுடி நாகேந்திரனின் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையில் நாகேந்திரனின் உடல் அவரது மகன் அஸ்வத்தாமனிடம் இன்று ஒப்படைக்கப்பட்ட நிலையில், வியாசர்பாடியில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி சென்னையில் ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே சிறையில் இருந்த ரவுடி நாகேந்திரன், அவரது மகன் வழக்கறிஞர் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், வழக்கறிஞர் அருள், ராமு, திருமலை, மணிவண்ணன், சிவா, அப்பு என்ற விஜய், கோழி என்ற கோகுல், சந்தோஷ், செல்வராஜ், அஞ்சலை, பொற்கொடி, மலர்கொடி என மொத்தம் 28 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். தலைமறைவாக உள்ள சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கின் குற்றப் பத்திரிகையில் முதல் குற்றவாளியாக (A1) ரவுடி நாகேந்திரன் சேர்க்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ரவுடி நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். ஆயுள் தண்டனைக் கைதி பிரபல தாதா நாகேந்திரன் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலை தங்கள் தரப்பு மருத்துவர் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது மனைவி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் அவசர முறையீடு செய்யப்பட்டது. அவரது மனைவியின் அவசர முறையீட்டை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்தது.















