வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

சென்னை: ஆக. 13-மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதைத் தொடர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிஷா நோக்கி நகரக்கூடும்.
தமிழகத்தில் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இப்பகுதிகளில் ஆக., 18 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில், சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.