வரைபடம் வெளியிட்ட அமீரகம்

புதுடெல்லி, செப். 16- ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. அந்தப் பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் நேரடி நிர்வாகத்தின் கீழ் அந்தப் பகுதி இருந்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் ஒரு நாள் காஷ்மீருடன் இணைக்கப்படும் என்று மத்திய அமைச்சர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். அதற்கேற்ப பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிலப்பரப்பையும் சேர்த்து புதிய இந்திய வரைபடத்தை ஐக்கிய அரபு அமீரக துணை பிரதமர் சயீப் பின் ஜாயத் அல் நயான் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் முழு காஷ்மீரும் இந்தியாவின் பகுதியாக காட்டப்பட்டுள்ளது. ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில் கடந்த 9 மற்றும் 10-ம்தேதிகளில் நடைபெற்றது. அப்போது, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளை இந்தியாவுடன் கடல் மற்றும் ரயில் போக்குவரத்தில் இணைக்கும் மிகப்பெரிய திட்டத்துக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்திய பிரதமர் மோடி, சவுதி அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயான், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகிய 3 பேரும் ஒன்றாக கைகுலுக்கிய வீடியோ வைரலானது.