
நவி மும்பை, அக். 23- ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நவிமும்பையில் உள்ள டி.ஓய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
அரை இறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் எஞ்சியுள்ள 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் இந்திய மகளிர் அணி களமிறங்குகிறது.
நியூஸிலாந்து அணிக்கு எதிராக இன்று இந்திய அணி மோதும் லீக் ஆட்டம் காலிறுதி ஆட்டமாகவே பார்க்கப்படுகிறது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை கடைசி அணியாக தக்கவைத்துக் கொள்ளலாம். ஏனெனில் தென் ஆப்பிரிக்கா 10 புள்ளிகளுடனும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தலா 9 புள்ளிகளுடனும் ஏற்கெனவே அரை இறுதிக்கு முன்னேறிவிட்டன.
ஒருவேளை இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் கடைசி ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிராக கட்டாயம் பெற்றாக வேண்டும். அதேவேளையில் இங்கிலாந்து அணி, நியூஸிலாந்தை தோற்கடிக்க வேண்டும்.
இது நிகழ்ந்தால் மட்டுமே இந்திய அணிக்கு அரை இறுதி வாய்ப்பு கைகூடும்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் 7 விக்கெட்கள் கைவசம் இருந்த போதிலும் இறுதிக்கட்டத்தில் 54 பந்துகளில் 56 ரன்களை சேர்க்க முடியாமல் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. அணியின் பிரதான பிரச்சினை 6-வது பந்து வீச்சாளர் தேர்வாக இருந்து வருகிறது.
இதன் காரணமாக சரியான அணிச்சேர்க்கையை அமைப்பதில் அணி நிர்வாகம் தடுமாறி வருகிறது. இதுவே சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் அழுத்தத்தை கையாள முடியாமல் போராடும் நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.


















