புதுச்சேரி செப்டம்பர் 23: புதுவையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கோஷ்டிகளாக மோதிக் கொண்டதில் 7 பேர் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி கலைத்து ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தினர்.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரியிலும் பல்வேறு இடங்களில் இந்து முன்னணியினர் சார்பில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் சாரம் அவ்வை திடலில் 21 அடி உயர சிலை வைக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
விநாயகர் சதுர்த்தி முடிந்து 5-வது நாளில் இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் வாகனங்களில் தனித்தனியாக அந்தந்த பகுதியில் இருந்து சாரம் அவ்வை திடலுக்கு இன்று மதியம் கொண்டு வரப்பட்டன.
அப்போது முத்தியால்பேட்டை திருவள்ளுவர் நகர் டோபிகானா பகுதியில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலையும், மதுரை வீரன் கோவில் தெருவில் வைக்கப்பட்டு இருந்த சிலையும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
டோபிகானா பகுதியில் வைக்கப்பட்டு இருந்த சிலையின் முன்பு விஷ்வா ஆதித்யா (வயது 21), அருண், சஞ்சய், அய்யனார் உள்பட பலர் சென்றனர். மதுரை வீரன் கோவில் தெரு சிலையின் முன்பு அசோக் (21), வசந்த் (23), சூர்யா (16) மற்றும் சிலர் சென்றனர். காந்திவீதியில் பெருமாள் கோவில் தெருவை தாண்டி சென்ற போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களாலும், கைகளாலும் தாக்கிக்கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் லேசாக தடியடி நடத்தி மோதலை கட்டுப்படுத்தினர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த விஷ்வா ஆதித்யா, அருண், சஞ்சய், அய்யனார், அசோக், வசந்த், சூர்யா ஆகிய 7 பேரும் படுகாயம் அடைந்தனர். போலீசார் அவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருதரப்பினர் கோஷ்டிகளாக மோதிக்கொண்டதால் விநாயகர் சிலை ஊர்வலத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.