விநாயகர் கையில் இருந்த 11 கிலோ லட்டு திருட்டு

திருப்பதி: செப். 23:
விநாயகர் சதுர்த்தியையொட்டி நாடு முழுவதும் பல இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்-மியாபூரில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டையின் போது லட்டு படைக்கப்பட்டு பின்னர் ஏலம் விடப்படுகிறது. இதனை பல ஆயிரம் ரூபாய்க்கு போட்டி போட்டு ஏலம் எடுப்பார்கள். இந்த நிலையில் மியாபூரில் பிரமாண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இந்த விநாயகர் சிலையின் கையில் 11 கிலோ லட்டு வைத்து வழிபாடு நடத்தினர். இந்த லட்டு 7 நாட்களுக்கு பிறகு விசர்ஜனம் நேரத்தில் ஏலம் விட முடிவு செய்திருந்தனர். நேற்று காலை விநாயகர் சிலை அருகே சென்ற பக்தர்கள் விநாயகர் சிலை கையில் இருந்த ராட்சத லட்டை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பார்த்தனர். அதில் வாலிபர் ஒருவர் விநாயகர் சிலை அருகே வந்து ஏலத்திற்கு விடுவதற்காக வைக்கப்பட்டிருந்த லட்டை திருடிச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.