
ஜோத்பூர், மார்ச்13-
ராஜஸ்தானின் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இருந்து எம்.ஐ.17 ரக விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று 20 வீரர்களுடன் நேற்று பிற்பகலில் பலோடி விமானப்படை தளத்துக்கு புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் கிளம்பிய சிறிது நேரத்தில் அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையறிந்த விமானி உடனடியாக அந்த ஹெலிகாப்டரை பில்வா கிராமத்தில் அவசரமாக தரையிறக்கினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த விமானப்படை உயர் அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்து சென்று, ஹெலிகாப்டரில் ஏற்பட்ட கோளாறை சரி செய்தனர். இதனால் சுமார் 1 மணி நேரத்துக்குப்பின், ஹெலிகாப்டர் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு சென்றது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானப்படை ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் ஜோத்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.