சண்டிகர், ஜூலை 16 – மாரத்தான் வீரர் பவுஜா சிங்கை கார் ஏற்றி கொன்ற வழக்கில் வெளிநாடு வாழ் இந்தியர் கைது செய்யப்பட்டு உள்ளார். பஞ்சாபைச் சேர்ந்த 114 வயது மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் பவுஜா சிங். பியாஸ் கிராமத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானார்.
பவுஜா சிங் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் இரங்கல் வெளியிட்டு இருந்தனர். இந் நிலையில், பவுஜா சிங் மீது கார் ஏற்றிக் கொன்ற சம்பவத்தில் அம்ரித்பால் சிங் தில்லான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் வெளிநாடு வாழ் இந்தியர் ஆவார். அவரது சொந்த ஊரான கர்தார்பூரில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் அண்மையில் தான் கனடாவில் இருந்து சொந்த ஊர் திரும்பி இருந்தார்.
சம்பவ பகுதியில் பதிவான சிசிடிவி கேமராவில் இருந்த காட்சிகளை கொண்டு விசாரணை நடத்திய போது விபத்தை ஏற்படுத்திய காரையும், அதன் பதிவு எண்ணையும் அடையாளம் கண்டனர். கபூர்தலாவைச் சேர்ந்த வரிந்தர் சிங் என்பவரின் கார் என்பதை கண்டுபிடித்த போலீசார், அவரின் கிராமத்துக்கே சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.














