
சென்னை:ஜூன் 10 – 2025 தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் அம்பயருக்கு எதிராக சில மோசமான செயல்களில் ஈடுபட்ட ரவிச்சந்திரன் அஸ்வினுக்குத் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் செய்த இரண்டு குற்றங்களுக்காக இந்தத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அம்பயர் முடிவை எதிர்த்ததோடு, கிளவுசை தூக்கி எறிந்து தனது கோபத்தை காட்டி இருந்தார்.5 தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக ரவிச்சந்திரன் அஸ்வின் செயல்பட்டு வருகிறார். திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விளையாடியபோது, ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு, பெண் நடுவரான கிருத்திகா எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுத்தார். அப்போது திண்டுக்கல் டிராகன்ஸ் அணியிடம் ரிவியூ எதுவும் கையில் இல்லை. அதனால் அஸ்வின் கடும் கோபம் அடைந்து, நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மிகவும் கோபமாக நடந்துகொண்டார். பின்னர், ஆடுகளத்தை விட்டு வெளியே செல்லும்போது தனது கிளவ்சை கழற்றி கோபமாக எறிந்தார். இந்தச் சம்பவம் கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதல் ஓவரிலேயே வைடு குறித்து ரிவியூ கேட்டு இரண்டு ரிவியூக்களையும் வீணடித்தது. இது போன்ற மோசமான முடிவை எடுத்துவிட்டு, பின்னர் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனபோது ரிவியூ கேட்க முடியவில்லை என அம்பயரைத் திட்டியது சரியா என பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில், அந்தப் போட்டியின் முடிவில், மேட்ச் ரெஃப்ரி, அஸ்வினின் நடத்தை குறித்து விசாரணை செய்ததாகவும், அதன் முடிவில் அம்பயரின் முடிவை எதிர்த்ததற்காக போட்டி சம்பளத்தில் 10 சதவீதம் அபராதமும், உபகரணங்களை வீசியதற்காக போட்டி சம்பளத்தில் 20 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டது. தன் மீதான குற்றத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் ஏற்றுக்கொண்டார். இதை அடுத்து அவருக்கு மொத்தமாக 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.