
கொழும்பு, பிப். 20- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நேற்று ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கை, ஜிம்பாப்வே அணியுடன் விளையாடியது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. தனது 19-வது அரை சதத்தை அடித்த தொடக்க வீரரான பதும் நிசங்கா 41 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் விளாசினார். குஷால் பெரேரா 22, குஷால் மெண்டிஸ் 14, துனித் வெல்லாலகே 15, கமிந்து மெண்டிஸ் 7, கேப்டன் தசன் ஷனகா 6 ரன்கள் சேர்த்தனர். இறுதிக்கட்ட ஓவர்களில் மட்டையை சுழற்றிய பவன் ரத்னாயகே 25 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் விளாசினார். அவரது அதிரடி காரணமாக இலங்கை அணியால் வலுவான இலக்கை கொடுக்க முடிந்தது. கடைசி 2 ஓவர்களில் மட்டும் பவன் ரத்னாயகே 30 ரன்களை விளாசியிருந்தார். ஜிம்பாப்வே அணி சார்பில் கிரேம் கிரீமர், பிராடு இவான்ஸ், பிளெசிங் முசாராபானி ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 179 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஜிம்பாப்வே அணி ஒரு கட்டத்தில் 14 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. தடிவனாஷே மருமணி 26 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 34 ரன்களும் ரியான் பரூல் 12 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 23 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு கடைசி 6 ஓவர்களில் 65 ரன்கள் தேவையாக இருந்தன. துஷான் ஹேமந்தா வீசிய 15-வது ஓவரில் ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிகந்தர் ராசா கடைசி 3 பந்துகளில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியை விரட்டினார். இந்த ஓவரில் 20 ரன்கள் சேர்க்கப்பட்டன. தீக்சனா வீசிய அடுத்த ஓவரில் சிகந்தர் ராசா தலா ஒரு பவுண்டரி, சிக்ஸரை விளாசினார்.


















