கிருஷ்ணகிரி பிப்ரவரி 22-
கிருஷ்ணகிரி மலையில் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவத்தில் தப்பியோடிய ஒருவரை துப்பாக்கியால் போலீஸார் சுட்டுபிடித்தனர். மேலும், ஒருவருக்கு கால் முறிவும், 2 பேரை போலீஸார் கைது செயதனர்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் பின்புறம் மலை உள்ளது. இந்த மலைக்கு கடந்த 19-ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த 35 வயது ஆண் ஒருவரும், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் சென்றனர். அவர்கள் மலையின் உச்சிக்கு சென்ற போது அங்கு 4 இளைஞர்கள் மது போதையில் அமர்ந்திருந்தனர். இதையடுத்து அந்த பெண்ணையும், உடன் வந்தவரையும் கத்தி முனையில் மிரட்டி 4 இளைஞர்களும், பெண் அணிந்திருந்த தங்க நகைகளை மற்றும் ரூ.7 ஆயிரம் ரொக்க பணத்தையும் பறித்தனர். தொடர்ந்து 4 இளைஞர்களில், 2 பேர் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவத்தை உடனிருந்த 2 பேர், தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். மேலும், அந்த பெண்ணுடன் வந்தவரின் செல்போனை பறித்த கும்பல், அவரது ஜிபே செயலி மூலம் ரூ.7 ஆயிரம் பறித்துக் கொண்டனர். இந்நிலையில், மலையில் இருந்து கீழே இறங்கி வந்த ஆண் மற்றும் பெண் மிகவும் சோர்வாக அழுதபடி வந்தததை, கண்ட அங்கிருந்தவர்கள் விசாரித்த போது, மலையில் நடந்த சம்பவத்தை கூறினர். மேலும்,போலீஸில் புகார் அளிக்காமல் சென்றுவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி எஸ்பி தங்கதுரை, தனிப்படை அமைத்து முழுமையாக விசாரணை நடத்தஉத்தரவிட்டார்.
தொடர்ந்து, கிருஷ்ணகிரி டவுன் மற்றும் தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், பெண்ணை மிரட்டி பணம், நகை வழிப்பறி செய்தது கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியை சேர்ந்த கலையரசன் (21), அபிஷேக் (20) மற்றும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்த சுரேஷ் (22), நாராயணன் (21) என தெரிந்தது. இதையடுத்து கலையரசன், அபிஷேக் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த சுரேஷ், நாராயணன் ஆகியோரை போலீஸார் தேடி வந்தநிலையில், தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன்மலைகுட்டை பெருமாள் கோயில் பின்புறம் பதுக்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
துப்பாக்கி சூடு: இதனை தொடர்ந்து டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்பிரபு, எஸ்ஐ பிரபாகர், முதல்நிலை காவலர் குமார், காவலர் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீஸாரை கண்டதும் சுரேஷ், நாராயணன் தாங்கள் வைத்திருந்த கத்தியால் போலீஸார் குமார், விஜய்குமாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றனர். இதையடுத்து போலீஸார் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் முதலில் வானத்தை நோக்கி சுட்டனர். தொடர்ந்து சுரேசும், நாராயணனும் ஓட முயற்சி செய்யவே, சுரேசின் வலது முட்டில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் அங்கேயே கீழே விழுந்தார். மேலும், தப்பியோடிய நாராயணன் கீழே விழுந்ததில் அவருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது.