பழனி முருகன் கோவில் உண்டியலில்2 கோடியே 74 லட்சம்

திண்டுக்கல், மே 17- பழனி முருகன் கோவிலில் சித்திரை திருவிழா, சித்ரா பௌர்ணமி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பழனி முருகன் கோவிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கையில் ரொக்கமாக 2 கோடி 74 லட்சத்து 24 ஆயிரத்து 650 ரூபாய் கிடைத்திருக்கிறது. 571 கிராம் தங்கமும், 11,856 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் பக்தர்கள்.தமிழ் கடவுளாம் முருகப் பெருமானுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கோவில்கள் இருக்கிறது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதைப் போல அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் அருள் பாலித்து வருகிறார். அந்த வகையில் முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மிகவும் புகழ் பெற்றது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை தரிசனம் செய்கின்றனர்.
குறிப்பாக தைப்பூசம் பழனி மலை கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்காக கார்த்திகை மார்கழி மாதங்களில் விரதம் இருக்கும் முருக பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசிப்பார்கள். இதேபோல பங்குனி உத்திரம் உள்ளிட்ட முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களில் பழனி மலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைகடலென திரளும். மேலும் வெள்ளி, செவ்வாய், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பழனி மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.