Home Front Page News 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயார் ஆவோம் – திமுக தீர்மானம்

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயார் ஆவோம் – திமுக தீர்மானம்

சென்னை: நவ.20-
2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாராகுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (20.11.2024) தி.மு.க. உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம் வருமாறு:-
மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பேருந்து பயணம், மகளிருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 பள்ளி மாணவ மாணவியருக்கு தினமும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், குழந்தைகளுக்கு ‘ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்’, கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை, பெருந்தலைவர் காமராஜர் கல்லூரிகள் மேம்பாட்டுத் திட்டம், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என இந்தியாவுக்கே முன்மாதிரியான முத்திரை பதிக்கும் திட்டங்களை நிறைவேற்றித் தந்து திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கடந்த அதிமுக ஆட்சியானது அனைத்து வகையிலும் தமிழ்நாட்டைப் பாழ்படுத்தியிருந்த நிலையை, சீர் செய்தது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டை சிறப்புமிகு மாநிலமாக உயர்த்திக் காட்டி வருகிறார் முதலமைச்சர் . மக்கள் நலத்திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், அனைத்து மாவட்டத் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் புதிய தொழிற்சாலைகள், புதிய வேலைவாய்ப்புகள் எனத் தேர்தல் வாக்குறுதியில், சொன்னதை எல்லாம் கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் அடுத்தடுத்து நிறைவேற்றி மக்களுக்காகவே, மக்கள் அரசை நடத்தி வரும் நிர்வாகத் திறமைமிக்க தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவருக்கு இந்த உயர்நிலைச் செயல்திட்டக் குழு தனது பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
ஒவ்வொரு தனிமனிதரின் கோரிக்கையையும் செவிமடுத்து, பார்த்துப் பார்த்துத் திட்டங்களை நிறைவேற்றும் முதலமைச்சராகவும், அதேநேரத்தில், கோட்டையில் இருந்து ஆட்சி செய்தால் மட்டும் போதாது என மாவட்டந்தோறும் நேரடிக் களஆய்வினைத் துவக்கி இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான முதலமைச்சராகச் செயல்பட்டு வருகிறார். மேலும், மாவட்டரீதியாக கழகப் பணிகளையும் மாவட்டம்தோறும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார் நம் தலைவர். கழக நிர்வாகிகளை நேரில் சந்தித்து அவர்களது எண்ணங்களை அறிந்தும், தனது கருத்துகளைப் பகிர்ந்தும் வருகிறார். இப்படி ஒரே நேரத்தில் ஆட்சிப் பணியையும், கட்சிப் பணியையும் செவ்வனே செய்து வரும் திராவிட நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்த உயர்நிலைத் செயல்திட்டக் குழு மனமாரப் பாராட்டுகிறது.

Exit mobile version