4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருவண்ணாமலை: அக்.2- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தொடர் விடுமுறை காரணமாக, நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எனவே, 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இன்றும் சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பவுர்ணமி உள்ளிட்ட விழா நாட்களில் மட்டுமே பக்தர்கள் வருகை அதிகமாக இருந்த நிலை மாறி, தற்போது அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, தொடர் அரசு அரசு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் புரட்டாசி மாத பவுர்ணமி மற்றும் கடந்த 28ம் தேதி முதல் தொடர் விடுமுறை அமைந்ததால் அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்திருந்தது.அதன்படி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட பொது தரிசன வரிசை, வெளிப்பிரகாரத்தையும் கடந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நீண்டு இருந்தது.
அதேபோல், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட கட்டண தரிசன வரிசையிலும் கூட்டம் அதிகரித்திருந்தது. மேலும், சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மேலும், தரிசனத்திற்கு பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க, ஒற்றை வரிசை விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மாடவீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடந்து வருவதால், பெரிய தெரு பேகோபுர தெரு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் அனுமதிக்கப்படுகின்றன.