மான்செஸ்டர், ஜூலை 28- இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் சிறப்பாக விளையாடி சதமடித்தார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 23-ம் தேதி 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி 358 ரன்களுக்கும், இங்கிலாந்து அணி 669 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 311 ரன்கள் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 4-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்தை கே.எல்.ராகுல் 87 ரன்களுடனும், கேப்டன் ஷுப்மன் கில் 78 ரன்களுடனும் தொடங்கினர். இருவரும் நிதானமாக விளையாடினர். ஆனால், சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 90 ரன்கள் எடுத்திருந்தபோது கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேப்டன் கில்லுடன், வாஷிங்டன் சுந்தர் இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய கில், டெஸ்ட் போட்டிகளில் தனது 9-வது சதத்தைக் கடந்தார்.
இந்தத் தொடரில் அவர் எடுக்கும் 4-வது சதமாகும் இது. சதத்தைக் கடந்த சில நிமிடங்களில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில், ஜேமி ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கில். அவர் 238 பந்துகளில் 103 ரன்கள்(12 பவுண்டரிகள்) எடுத்தார். பின்னர் வாஷிங்டன் சுந்தருடன், ரவீந்திர ஜடேஜா இணைந்து பொறுப்புடன் விளையாடினர். மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணியின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்புக்கு 223 ரன்களாக இருந்தது. உணவு இடைவேளைக்குப் பின்னர் சுந்தரும், ஜடேஜாவும் பொறுமையுடன் விளையாடி இன்னிங்ஸை கட்டமைத்தனர். இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சாளர்களை மாற்றிப் பார்த்தும் பலனில்லை.